Friday 6 November 2015

கவிஞர் மகுடேஸ்வரன் - தமிழில் பிழையின்றி எழுத .

இந்த பதிவு கவிஞர் மகுடேஸ்வரனின் முகப்புத்தகத்தினின்று எடுக்கப்பட்டது . 

இடுகை முகவரி : https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/968918913146598

கவிஞரே... ஓர் ஐயம் !
இதை நீங்கள் முன்பே விளக்கியிருந்தால் மன்னிக்கவும்.
தமிழ் என்ற சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் வலி மிகுமா?
உதாரணமாக, தமிழ் கலாச்சாரமா, தமிழ்க் கலாச்சாரமா?
தமிழ் பாடசாலையா, தமிழ்ப் பாடசாலையா?
இதுபோல் மற்ற வல்லினச் சொற்கள் தமிழ் முன் வந்தால் வலி மிகுமா? நன்றி - பழனிசாமி இரத்தினசாமி.
-------------------------------------------------
*
பொதுவாக, இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையில் வலிமிகுவித்து விடுவது நலம். ஏனெனில் இரண்டுமுதல் ஏழு வரையிலான எல்லா வேற்றுமை உருபுகளின் உடன் தொக்க தொகைகட்கும் வலிமிகும்.
பிற தொகைகள் சிலவற்றுக்கும் தொடர்களுக்கும் வலிமிகுமா, மிகாவா என்பதைக் குறித்து நமக்கு அறிவு இருக்க வேண்டும்.
ஏற்கெனவே எழுதியவைதாம் என்றாலும் எல்லாரும் நன்றாக மறந்திருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை திருத்தமாய் அவற்றைக் கற்றுக்கொள்வோம். தமிழ் என்பதை முதற்சொல்லாகக் கொண்டே இவற்றை விளக்கிவிடுகிறேன்.
*
ஒரு சொல்லை அடுத்து வல்லின எழுத்துகளில் தொடங்கும் சொல் தோன்றினால், முதற்சொல்லின் ஈற்றில் வல்லின மெய் மிகுவது வலிமிகுதல் ஆகும்.
*
கசடதபற என்னும் வல்லின எழுத்து வரிசைகளில் ட,ற ஆகிய எழுத்து வரிசைகளில் சொற்கள் தொடங்குவதில்லை. அதனால் அவை கழிய, கசதப ஆகிய நான்கு வல்லின எழுத்துகளில் தொடங்குபவை ஒரு சொல்லை அடுத்து வந்தால்... வல்லின மெய்யெழுத்து மிகுமா, மிகாதா என்பதை முடிவு செய்யும் அறிவைப் பெறவிருக்கிறோம்.
*
எழுத்துகளால் ஆகியது, பொருள் தருவது - இதைச் சொல் என்கிறோம். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களின் வகைமைகள் விரிகின்றன. நிற்க.
*
ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் (சொற்களின் தொடர்வரிசை) ஆகும். தமிழ் என்பது சொல். தமிழ்மொழி என்பது சொற்றொடர்.
*
சொற்றொடர்களின் வகைமைகள் இவை. அந்தந்த வகைமைகளுக்கு வலிமிகுமா என்பதை எடுத்துக்காட்டின் வழியே புரிந்துகொள்ளலாம். அச்சொற்றொடர்களுக்கான எடுத்துக்காட்டாக தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறேன். கீழே காண்க !
*
1. எழுவாய்த் தொடர் - எழுவாய் பயனிலையாய் இருப்பது.
தமிழ் சிறந்தது - வலிமிகாது.
*
2. விளித்தொடர் - முதற்சொல் விளிப்பது.
தமிழே பாட்டில் நடமாடு - வலிமிகாது
*
3. வினைமுற்றுத் தொடர் - வினைமுற்றின்பின் வருவது.
வாழ்கிறது தமிழ் - வலிமிகாது
*
4. பெயரெச்சத் தொடர் - பெயரெச்செத்தின்பின் வருவது.
எழுதிய தமிழ் - வலிமிகாது
*
5. வினையெச்சத் தொடர் - வினையெச்சத்தின்பின் வினை வருவது.
வரச் சொன்னான் - வலிமிகும்.
எழுந்து சென்றான் - வலிமிகாது.
இங்கே ‘தமிழ்’ எடுத்துக்காட்டாகாது.
*
6. இடைச்சொற்றொடர் - பெயர் வினைக்கு முன்பின் இடைச்சொல் வருவது.
தமிழ்கொல், மற்று தமிழ் - வலிமிகாது.
*
7. உரிச்சொற்றொடர் - உரிச்சொல்லடுத்து வருவது.
கடிதமிழ், நனிதமிழ் - வலிமிகாது.
*
8. அடுக்குத் தொடர் - ஒரே சொல் அடுத்தடுத்து வருவது.
தமிழ் தமிழ் - வலிமிகாது.
*
மேலுள்ள தொடர்களில் வேற்றுமைத் தொடர் விடுபட்டுள்ளது. அதை இனி பார்க்கப் போகிறோம்.
*
இத்தொடர்வகைகளை நாம் அன்றாடம் பேசுகிறோம் எழுதுகிறோம். இவற்றில் வினையெச்சத் தொடர் தவிர்த்த எவற்றுக்கும் வலிமிகவில்லை என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.
*
அடுத்து, தொகை வகைமைகளைப் பார்ப்போம். வேற்றுமைத் தொகைகளை இறுதியாகப் பார்க்கப் போகிறோம் என்பதால் பிற தொகை வகைமைகளை முதற்கண் காண்போம்.
*
இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால், தொடர்வகைகளைப்போல அப்படியே பொருள்கொள்ளாமல், அதில் மறைந்திருக்கும் தொகையுருபைச் சேர்த்துப் பொருள்கொள்வதே தொகை ஆகும். தொகுத்து, அதன்பின் பொருள்கொள்வது.
*
1. வினைத்தொகை - வினைவேரை அடுத்து பெயர் வருவது.
பொங்குதமிழ், பேசுதமிழ் - வலிமிகாது.
*
2. உவமைத்தொகை - உவமையாய் ‘போன்ற’ உவம உருபு மறைந்து வருவது.
மதுத்தமிழ் - வலிமிகும்.
*
3. பண்புத் தொகை -பண்பை விளக்கி ‘ஆகிய’ பண்புருபு மறைந்து வருவது.
செந்தமிழ், பசுந்தமிழ் - வலி மிகும்.
*
4. உம்மைத் தொகை - உம் சேர்த்துத் தொகுப்பது.
தமிழ் தெலுங்கு, தமிழ் தமிழர் - வலிமிகாது.
*
5. அன்மொழித்தொகை - எல்லாத் தொகை வகையும் கலந்தது.
எழுகதிராய்ச் செந்தமிழொளி பரவட்டும் - இடத்திற்கேற்ப வலிமிகும்.
*
ஆக, தொகை வகைமைகளில் வினைத்தொகைக்கு வலிமிகாது. உம்மைத்தொகைக்கு வலிமிகாது. உவமை, பண்புகளில் வலிமிகும். அன்மொழிக்கு இடத்திற்கேற்ப முடிவு செய்வோம்.
*
இனி மீதமுள்ள வேற்றுமைத் தொடர், வேற்றுமைத் தொகை, வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் பார்ப்போம்.
*
வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத் தொகை. வேற்றுமை உருபு தோன்றுவது வேற்றுமைத் தொடர்.
இரண்டு சொல்லுக்கும் இடையில் வேற்றுமை உருபோடு சேர்த்து, அவற்றுக்கிடையேயான பயனையும் சேர்த்துக் கருதிப் பொருள்கொள்வது ‘வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.’
*
எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றின் உருபுகள் என்னென்ன ?
--------------------------
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
-------------------------
இரண்டாம் வேற்றுமைத் தொகை (ஐ) :
தமிழ் படித்தான் - வலிமிகாது.
இரண்டாம் வேற்றுமைத் தொடர் :
தமிழைப் படித்தான் - வலிமிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை : தமிழ்க்கேணி - தமிழைச் சுரக்கும் கேணி - வலிமிகும்.
---------------------------
மூன்றாம் வேற்றுமைத் தொகை (ஆல்) :
தமிழ் தடுமாற்றம் - வலிமிகாது.
மூன்றாம் வேற்றுமைத் தொடர் :
தமிழால் தடுமாற்றம் - வலிமிகாது.
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை :
தமிழ்க் காவியம் - தமிழால் யாத்த காவியம் - வலிமிகும்.
----------------------------
நான்காம் வேற்றுமைத் தொகை (கு) :
தமிழ்க்கேடு - வலிமிகும்
நான்காம் வேற்றுமைத் தொடர்
தமிழுக்குக் கேடு - வலிமிகும்
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை :
தமிழ்த்தொண்டு - தமிழுக்குச் செய்யும் தொண்டு - வலிமிகும்.
------------------------------
ஐந்தாம் வேற்றுமைத் தொகை (இன்,இல்) :
தமிழ் கூறு - வலிமிகாது.
ஐந்தாம் வேற்றுமைத் தொடர்
தமிழில் கூறு - வலிமிகாது
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்ப்பாட்டு - தமிழில் எழுதிய பாட்டு - வலிமிகும்.
-------------------------------
ஆறாம் வேற்றுமைத் தொகை (அது) :
தமிழ்த்திறன் - வலிமிகும்.
ஆறாம் வேற்றுமைத் தொடர்
தமிழினது திறன் - வலிமிகாது.
ஆறாம் வேற்றுமை உருபுக்கு உடன் தொக்க தொகை அரிது.
----------------------------------
ஏழாம் வேற்றுமைத் தொகை (கண்) :
தமிழ் தேடித்திரிவோர் - வலிமிகாது.
ஏழாம் வேற்றுமைத் தொடர்
தமிழின்கண் தேடித்திரிவோர் - வலிமிகாது.
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தமிழ்ப்பற்று - தமிழின்கண் தோன்றிய பற்று - வலிமிகும்.
---------------------------
விதிகளை அறிந்துகொண்டுவிட்டோம். இப்போது உங்கள் ஐயம் என்ன ? தமிழ் கலாச்சாரமா ? தமிழ்க் கலாச்சாரமா ?
‘தமிழ் கலாச்சாரம்’ என்னும் இத்தொடர் என்ன வகையாய்க் கருதத்தக்கது ?
எழுவாய்த் தொடரா ? இல்லை
விளித்தொடரா ? இல்லை
வினைமுற்று, பெயரெச்ச, வினயெச்ச, இடை, உரி, அடுக்குத் தொடர்களில் ஏதேனுமா ? இல்லை.
அடுத்து, ஏதேனும் தொடர் வகையா என்று பார்ப்போம்.
வினைத்தொகையா ? இல்லை
உவமை/ பண்பு/அன்மொழித் தொகையா ? இல்லை
உம்மைத் தொகையா ? ஆம். தமிழும் கலாச்சாரமும் என்று விரித்துப் பொருள்கொள்ளும்படி ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்றால் உம்மைத் தொகைதான்.
தமிழ் கலாச்சாரம் நன்னடத்தை நன்றியுணர்ச்சி கெட்டுப்போய்விட்ட காலமிது.
இவ்வாறு எழுதப்பட வேண்டும் அது. தமிழும் கலாச்சாரமும் நன்னடத்தையும் நன்றியுணர்ச்சியும் கெட்டுப்போய்விட்ட காலமிது’ என்று நாம் உம்மைத் தொகையாய் விரித்துப் பொருள்கொள்வோம். அங்கே வலி மிகாது. உம்மைத் தொகையாய் எழுதப்படவேண்டிய வாக்கியங்களைத்தாம் நாம் இப்போது காற்புள்ளியிட்டு எழுதுகிறோம்.
உம்மைத் தொகையாய்க் கருதி எழுதப்படவில்லை எனில்... அடுத்து வேற்றுமைத் தொடரா, தொகையா, உடன் தொக்க தொகையா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரம்.
தமிழைக் கலாச்சாரம் ? இல்லை. ஐ வராது. இரண்டாம் வேற்றுமை தொடர், தொகை, உடன் தொக்க தொகை இல்லை.
இப்படி ஒவ்வொரு வேற்றுமை உருபாகப் பொருத்திப் பார்த்துக்கொண்டே வரவேண்டும். எது பொருள் சிறக்கும்படி, கூற நினைத்த பொருளோடு பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.
தமிழின் கலாச்சாரம் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாய்ப் பயன்படுத்தினால் வலிமிகாது. தமிழ் கலாச்சாரமும் இலக்கியமும் பன்னெடுங்கால வரலாற்றையுடையது.
தமிழில் ஒழுகும் கலாச்சாரம்’ என்ற பொருளில் கருதினால் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகிவிடும். இங்கே வலிமிகும். பெயரும் பெயரும் சேர்ந்து உருவாகும் தொடர்களை நாம் ‘உடன் தொக்க தொகையாக’ எப்படியும் பொருள்கொள்ள இடமிருக்கிறது. அதனால்தான் இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வலி மிகுவித்து எழுதுவது நல்லது.
அடுத்துள்ளது, தமிழைக் கற்கும்/கற்பிக்கும் பாடசாலை என்பதால் தமிழ்ப் பாடசாலைதான்.
பாடசாலை ஏன் வலிமிகவில்லை ?
பாடத்தினது சாலை (அது - ஆறாம் வேற்றுமைத் தொகை) என்பதால் பாடசாலைக்கு வலிமிகவில்லை.
மரண தண்டனை ஏன் வலிமிகவில்லை ?
மரணத்தால் தண்டனை (ஆல் - மூன்றாம் வேற்றுமைத் தொகை) என்பதால் வலிமிகவில்லை.

Wednesday 4 November 2015

மலர்கள் கேட்டேன் ( I asked for Flowers ) - Video Version

மலர்கள் கேட்டேன் ( I asked for Flowers ) - Video Version

This video song is a short reprise of the audio song. The lines deals with the emotions of a lover who wish to reach her beloved. 



மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிழ்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

I asked for flowers , you gave me the forest , you were the one
I asked for water, you gave me the elixir, you were the one
What I ask for
What shall I ask for , my beloved (God/Lover), so you would give yourself to me

Composer : A.R.Rahman
Lyricist: Vairamuthu
Movie: OK Kanmani
Year: 2015

Monday 2 November 2015

துக்ளக்கிடம் மாட்டிய மதுரை


















யார் தமிழர் என்ற கேள்வி தற்பொழுது மக்களின் மனதில் தொக்கிநிற்கிறது . 

இனப் பெருமையும் , சாதிப் பெருமையும் பல்வேறு நேரங்களில் நமது அறிவுத்திறத்தை மழுங்கடிக்கும் என்ற விஷயம் பல வரலாற்று சம்பவங்கள் மூலம் நிருபனமாகும் நிதர்சனம் . 

நாயக்கர் மஹால் என்ற ஒரு கட்டிடம் , தமிழனுக்கு இழுக்கு என்று வரிந்துகட்டிக்கொண்டு இடுகைகளை பதியும் பலர் , அதே நாயக்கர் மன்னர்கள் தான் , இசுலாமியப் படையெடுப்பின் போது மதுரையில் இருந்து வெளியேறிய மீனாக்ஷியை , குமரி மாவட்டத்தில் இருந்த ஒரு சிறு ஆலயத்தில் இருந்து மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருகோவிலில் கொலுவேற்றினான் , பிரதிஷ்டை செய்தான் என்ற செய்தியை அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை .

மேலும் துக்ளக்கின் படையெடுப்பினால் சிதலம் அடைந்த பல கோவில்களை , மீனாக்ஷி அம்மன் கோவிலையும் சேர்த்து , எடுப்பித்து கட்டினான் என்ற செய்தி அறிந்தால் , இவர்கள் அக்கோவிலையும் தமிழனுக்கு இழுக்கு என்று கூறுவார்களா என்று தெரியவில்லை .

தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு திருப்பணி செய்து , மிக உயரிய கோபுரங்களை கட்டுவித்து , சைவ வைணவ ஆலயங்களுக்கு புத்துயிர் ஊட்டியது இவர்கள் ஆட்சியில் தான் . மதுரையிலும் , அதனை சுற்றி இருக்கும் ஊர்களிலும் நீர் நிலைகளை மீண்டும் தூர்வாரி , பல கண்மாய்களை உருவாகியதும் இவர்கள் தான் . வறண்ட பூமியான இங்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் இனத்திற்கு தங்கள் காரியங்களால் தொண்டு செய்தவர்களா ? இல்லை இருக்கும் கண்மாய்களை , கீழ் இருக்கும் கருமை கல்லுக்காக பலி கொடுத்தவர்கள் தமிழர்களா அல்லது தமிழ் இனத்திற்கு தொண்டு செய்தவர்களா ?

வரலாற்று வாசிப்பும் , பிரஞ்ஞையும் இல்லாத இளையர் கூட்டத்தை எப்படி வேண்டுமானாலும் உசுபேற்றி விடலாம் என்ற எண்ணம் எத்தகைய கொடியது . மேலும் அது வெகு எளிதில் கட்டற்று போகலாம் என்பதும் நிதர்சனமான உண்மை .

அது ஏன் நாயக்கர் மஹாலுக்கு மாத்திரம் பல செப்பனிடும் பணிகள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . காரணம் , மற்ற ஜமீன்களின் சிதலம் அடைந்த மாளிகைகள் நாயக்கர் மகாலைப் போன்று நகரத்தின் மையத்தில் இல்லை , மேலும் இந்த நூற்றாண்டு வரை நாம் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை எவ்வாறு பாதுகாத்தோம் என்பது ஊரறிந்த ரகசியம் . உண்மை இதுவாய் இருக்க ஏதோ ஒரு மிகப்பெரும் சதித்திட்டம் போன்று இதை பேசுவது நம் அறிவுத்திறத்திற்கு இழுக்கு .

மேலும் பெருநகரமாம் மதுரைக்கு மீண்டும் வாழ்வளித்த அம்மன்னர்களின் பெயரில் இருக்கும் அவ்வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் எந்த வகையினில் இழுக்கு என்று இப்பொழுதும் காரணங்களை தேடுகிறேன் .

அப்படி பார்த்தால் நம் தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே உள்ள கோட்டையை எடுப்பித்து கட்டியது நாயக்க மன்னர்கள் தான் , அதை மேலும் உருமாற்றி கட்டியவர்கள் மராத்தியர்கள் . அப்படி என்றால் அதுவும் தமிழனுக்கு இழுக்கா ?

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பல பணிகளையும் , சுற்றி சில கோவில்களையும் எடுத்து கட்டியவர்கள் அவர்கள் ? ஆகா அதுவும் தமிழனுக்கு இழுக்கா ? நீராதாரத்தை காக்க வேண்டி ஜல சூத்திரா என்னும் திட்டத்தை தஞ்சையில் செயல்படுத்திய அவர்கள் தமிழ் அகத்திற்கு தொண்டு செய்தவர்களா இல்லை அதன் மேல் மண் மூடி , வீடு கட்டி , அதை சுத்தப்படுத்த மக்கள் எண்ணியும் அவ்வெண்ணத்தை ஈடேற விடாமல் செயல்படுபவர்கள் தமிழர்களா ?

அப்படி என்றால் , தமிழ் மண்ணில் சொல்லெல்லா துயரத்தை ஏற்படுத்திய தாதுப்பஞ்சத்தை ஏற்படுத்திய ஆங்கிலேயர்கள் தான் பல நீர் ஆதாரங்களை , அணைக்கட்டுகளை மீண்டும் எடுப்பித்து கட்டினார் . ஆக , பல லட்சம் தமிழர்கள் அடிமைகளாய் தென் ஆபிரிக்கா , மொரிசியஸ் , பிஜி , மலேசியா , பிரெஞ்சு குயானா , இலங்கை போன்ற நாடுகளுக்கு செல்ல காரணமாய் இருந்தவர்களும் அவர்கள் தான் . ஆக , அவர்கள் கட்டிய நீர் ஆதாரங்களையும் , அணைக்கட்டுகளையும், ரயில் பாதைகளையும் , துறைமுகங்களையும் தகர்த்து , அவை யாவும் தமிழனுக்கு இழுக்கு என்று கூறுவார்களா ?

தமிழுக்கு , தமிழனுக்கு இழுக்கு யாதென்றால் மாறுகின்ற உலகில் தங்கள் நிலையை ஏற்படுத்திக்கொள்ளாமல் , ஆற்றல் மிகு இளையர்களை மடை மாற்றும் வேலைகளைச் செய்பவர்கள் தான் .

அந்த நிலையை ஏற்படுத்த இருக்கும் ஆயுதம் கல்வி மற்றும் பொருளாதாரம் . அந்நிலை இல்லையெனில் , தமிழும் அதன் பெருமையும் துக்ளக்கிடம் மாட்டிய மதுரை போன்று தான் .

சிதலம்